குறள் - 0129
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அடக்கமுடைமை - The Possession of Self-restraint
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
மு.வ உரை:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
பரிமேலழகர் உரை விளக்கம்
ஆறிப்போதலால், தீயினாற் சுட்டதனைப் புண் என்றும், ஆறாது கிடத்தலால் நாவினாற் சுட்டதனை வடு என்றும் கூறினார். தீயும், வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்குமாயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது 'குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம்'.
இவை மூன்று பாட்டானும் மொழியடக்கம் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
Couplet:
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
Explanation:
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more.
No comments