Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0070

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மு. உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி = கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;
இவன்தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல் = தன்னறிவு மொழுக்கமுங் கண்டார் இவன்றந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான்கொல்லோவென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
சொல் லென்பது நிகழ்த்துதலாகிய தன்காரணந் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் அங்ஙனஞ்சொல்லவொழுகல்.
இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

Couplet:
(So to act) that it may be said by what great penance did his father beget him, is the benefit which a son should render to his father.

Explanation:
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.


No comments